கடன் தவணை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் வழங்கும்படி, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020ல், நாடு முழுதும் ஊரடங்கு அமலானது. அப்போது வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள், அதற்கான தவணை செலுத்த ரிசர்வ் வங்கி, ஆறு மாதம் அவகாசம் வழங்கியது.தற்போது கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக இருப்பதால், தமிழக அரசு உட்பட, பல்வேறு மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர். பெரும்பாலான நிறுவனங்களில் சம்பள பிடித்தம் செய்துள்ளதால், சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் தவணை தொகை செலுத்த, வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இது பற்றி வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
கடன் தவணை செலுத்த, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் வழங்க, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதேநேரத்தில் அவகாசம் வழங்குவதும், அதற்கான வழிமுறைகள் வகுப்பதும், வங்கிகளின் முடிவுக்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளது.
எனவே கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்குவது, வங்கிகளின் முடிவை பொறுத்தது. இது குறித்து வங்கிகளின் உயர்மட்ட குழுவினர் முடிவு செய்து, சுற்றறிக்கை அனுப்புவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment