மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு மனிதநேயம் மையம் இலவச பயிற்சி - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 4, 2023

மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு மனிதநேயம் மையம் இலவச பயிற்சி

மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு மனிதநேயம் மையம் இலவச பயிற்சி 50 மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுடன் இணைந்து மனிதநேயம் மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று சைதை துரைசாமி அறிவித்துள்ளார். மாவட்ட நீதிபதிகள் தேர்வு பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான ‘மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம்' தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர்ந்த பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற வகையில் கடந்த 17 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவச பயிற்சியை அளித்து வருகிறது. 

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேயம் மையம் இணைந்து இலவச பயிற்சியை வழங்கி வருகிறது.அந்த வகையில், இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் சிவில் நீதிபதிகளாக 2012-ம் ஆண்டு 38 பேரும், 2014-ம் ஆண்டு 57 பேரும், 2018-ம் ஆண்டு 46 பேரும், 2019-ம் ஆண்டு 40 பேரும் என மொத்தம் 181 பேர் தேர்வாகினர். மாவட்ட நீதிபதி பதவிக்கு 2013-ம் ஆண்டு 5 பேரும், 2019-ம் ஆண்டு ஒருவரும் தேர்வாகினர். அரசு உதவி குற்றவியல் வக்கீல் பணிக்கு 2019-ம் ஆண்டு 7 பேரும், 2021-ம் ஆண்டு 12 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 50 மாவட்ட நீதிபதி பதவியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து இந்த தேர்வுக்கு வக்கீல் அமல்ராஜ் தலைமையிலான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மனிதநேயம் மையத்துடன் இணைந்து இலவச பயிற்சி அளிக்க உள்ளது. அறிவிப்பு இதுதொடர்பாக மனிதநேயம் மையத்தின் அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 50 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு 30.9.2023 அன்று முதல் நிலைத்தேர்வும், 2 மற்றும் 3.12.2023 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மனிதநேய மையத்துடன் இணைந்து இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர்கள் 4-ந் தேதி (இன்று) முதல் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையில், சென்னை சி.ஐ.டி.நகர் முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ அல்லது 044 24358373, 25342739, 24330952, 84284 31107 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டோ விண்ணப்பிக்கலாம். ‘ஆன்லைன்' (tnbarcouncil@yahoo.com, mntfreeias.com) மூலமாகவும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பு வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) மாலையில், பார் கவுன்சில் ஆடிட்டோரியத்தில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment