குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அமைச்சர் விளக்கம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 8, 2023

குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அமைச்சர் விளக்கம்

தேர்வர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்பது தொடர்பான விளக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 



குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 5 ஆயிரத்து 529 இடங்களுக்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு (2022) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21-ந்தேதி நடத்தப்பட்டது, இந்த தேர்வை 9 லட்சம் தேர்வர்கள் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் 55 ஆயிரம் பேர் அடுத்தக்கட்டமாக முதன்மைத் தேர்வுக்கு தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டனர். 

 அவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை சுமார் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவு வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தேர்வர்கள் எப்போது தேர்வு முடிவு வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் ஆவலோடு காத்து இருக்கின்றனர். இந்த தேர்வு முடிவு தாமதம் ஆவது தொடர்பாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. தேர்வு முடிவை வெளியிடக்கோரி அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். 


 இந்த நிலையில் இதுதொடர்பாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்.சி. மூலம் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் கடந்த 25.2.2023 அன்று தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை சுமார் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதியுள்ளனர். மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வாணையம் நடத்தும் முதன்மைத் தேர்வை எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கையை காட்டிலும் 3 மடங்கு அதிகம் ஆகும். இந்த தேர்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு சுமார் 5 மாதங்கள் ஆகும். எனவே மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு நமது மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த பணி தொடங்கப்பட்ட கடந்த மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கம்ப்யூட்டர் ஆய்வகம் மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலையில் இருந்தததால் இப்பணிகள் ஆரம்பிக்க சற்றே தாமதம் ஆனது. 


இதுபோன்ற தாமதம்தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் வரக்கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2-வது கம்ப்யூட்டர் மதிப்பீட்டு ஆய்வகம் அமைக்க உத்தரவிட்டார். அந்தவகையில் போர்க்கால அடிப்படையில், ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக செவ்வனே நடைபெற்று வருகின்றன. 80 சதவீதத்துக்கும் மேல் பணி நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, சுமார் 6 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமன ஆணைகள் முதல்-அமைச்சரால் வழங்கப்படும். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் முதல்-அமைச்சரால் குரூப்-4 பணியில் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-24-ம் ஆண்டில் மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment