வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
2019-20 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் காலியாக இருந்த 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டில் 131 மையங்களில் நடந்தது.
அதன்படி, அன்றைய தினம் காலையில் தமிழ் தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொது பாடத்துக்கான தேர்வும் நடந்தது. தமிழ் தகுதித் தாள் தேர்வு பொது பாடத் தேர்வுக்கான தகுதித் தேர்வாக மட்டுமே கருதப்படும்.
அந்த வகையில் பொதுப் பாடத்துக்கான தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்டது. 33 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை 35 ஆயிரத்து 403 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, தேர்வை எழுதிய தேர்வர்கள், தங்களுடைய மதிப்பெண்களை http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment