‘மாணவர்கள் தேர்வுக்கு தயாராக செல்போனில் இருந்து விலகி இருக்க வேண்டும்' மத்திய கல்வி அமைச்சர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 30, 2024

‘மாணவர்கள் தேர்வுக்கு தயாராக செல்போனில் இருந்து விலகி இருக்க வேண்டும்' மத்திய கல்வி அமைச்சர்

கடுமையான போட்டி சூழலில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக தேர்வு நேரத்தில் கல்வி மற்றும் செயல்திறன் குறித்த அழுத்தத்தை மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலை மிக முக்கியமாக கவனிக்கத்தக்க ஒன்றாகும். 


இதுபோன்ற அழுத்தம் மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வெகுவாக பாதிக்கிறது. தேர்வுக்கான தயார்நிலை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். படிப்புக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இடையில் ஒரு நியாயமான நல்ல சமநிலையை பராமரிப்பது மிக முக்கியமானது. 

 உடற்பயிற்சி 

தேர்வுகளின்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை பராமரிக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் படித்தவற்றை நினைவுபடுத்தும் திறனை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் தேர்வு எழுதுவதற்கான செயல்திறனை மேம்படுத்த முக்கியமானவை. தேர்வுக்கு தயாராகும்போது, மாணவர்கள் ஆரோக்கியத்தை விட படிப்புக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். நடைபயிற்சி, யோகா போன்ற சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும். மாணவர்கள் தங்கள் மனதை புதுப்பிக்க உதவி செய்யும். 

நல்ல தூக்கம் 

நாம் சாப்பிடும் உணவுதான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், மன நலனையும் தீர்மானிக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சீரான உணவை உட்கொள்வது மூளை செயல்பாட்டிற்கு தேவையான சக்தியை வழங்குகிறது. போதுமான நீர்ச்சத்தை நாம் கொண்டிருக்கிறோமா என்பதில் அக்கறையின்மை உள்ளது. திட உணவுக்கு சமமாக நீர்ச்சத்து முக்கியமானது. நீர்ச்சத்து இல்லாதது அறிவாற்றல் திறனையும், செரிமானத்தையும் வெகுவாக பாதிக்கும். மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு சென்று காலையில் விழித்து சீரான தூக்க நடைமுறைகளைப் பராமரிக்க வேண்டும். இரவு நேரத்தில் முறையான தூக்கத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் எப்போதும் சிறப்பான நினைவாற்றலுடன் படிக்க முடியும். நல்ல தூக்கம் என்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். 

தியானம் 

மன அழுத்தம், பதற்றம், பிற மனநல பிரச்சினைகளை கையாள மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதை முன்னுரிமையாக கொண்டிருக்க வேண்டும். தேர்வுகளின்போது மன அழுத்தங்கள் குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பெற்றோர் அல்லது ஆசிரியர் அல்லது ஆலோசகர்களிடம் தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டும். உளவியல் ரீதியாக மாணவர்கள் சிக்கி கொள்ளாமல் அவர்களை திறம்பட கையாள வேண்டும். தேர்வு மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க தியானம் ஒரு கருவியாக இருக்கும். தியானம், ஆழ்ந்த சுவாசம், யோகா போன்ற பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இது, மனதை அமைதிப்படுத்தவும், கவன சிதறலை தடுக்கவும், பதற்றத்தை குறைக்கவும் உதவும். 

நேர நிர்வாக யுக்தி 

கடைசி நிமிட பதற்றத்தை குறைக்க மாணவர்கள் படிக்கும் நேரத்தை நிர்வகிப்பதற்கான யுக்திகளை கையாள வேண்டும். மின்னணு ஊடகத்தை அதிகமாக மாணவர்கள் சார்ந்துள்ளனர். செல்போன், மடிக்கணினி போன்றவற்றில் அதிக நேரத்தை மாணவர்கள் செலவிடுகின்றனர். இதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இன்றைய காலகட்டத்தில் மின்னணு ஊடகம் இன்றியமையாததாகி விட்டது. தேர்வுக்கு மாணவர்கள் தாயாராவதற்கு சில மணி நேரங்களை சேமிக்க செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருப்பது மிக அவசியம் ஆகும். 

வெற்றியை ஒருங்கிணைக்கும் 

தேர்வுகளின் போது மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனை வளர்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வெற்றியை ஒருங்கிணைக்கும். மாணவர்களின் நல்வாழ்வை கவனித்துக்கொள்வது அவர்களின் கல்வி செயல்திறனை மேம்படுத்தும். இவை தேர்வு அறைக்கு அப்பால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களை தயார்படுத்துகிறது. தேர்வு மன அழுத்தத்தை திறம்பட கையாளுவதன் மூலம், நமது இளம் மாணவர்கள், தங்கள் திறனுக்கு ஏற்ப செயல்படுவார்கள். இதன்மூலம் 2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்குகளை அடையும் வகையில் நம்பிக்கையான மற்றும் முன்னோக்கி செல்லும் இளைஞர்களாக உருவெடுப்பார்கள்.

No comments:

Post a Comment