அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை சேகரிக்கும் முனைப்பில் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.
அதிலும் குறிப்பாக 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் எவை? 25 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகள் எவை? என்பது போன்ற விவரங்களை புள்ளி விவரங்களுடன் கேட்டு பெற்று வருகிறது.
இந்த புள்ளி விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரிப்பதற்கான காரணம் குறித்து விசாரித்த போது, குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை அடையாளம் கண்டு, அந்த பள்ளிக்கு அருகில் ஓரளவுக்கு மாணவர் சேர்க்கையுடன் இருக்கும் பள்ளிகளுடன் இணைக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டது.
சில மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளிகளில் 150 பேர் வரை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு வெறும் 3 மாணவர்கள் மட்டும் படித்து வரும் அவலநிலை இருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையால், குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment