அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீடு திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ரூ.10 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 12, 2024

அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீடு திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ரூ.10 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்

அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீடு திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ரூ.10 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம் ரூ.10 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறும் வகையிலான அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

வழிகாட்டு நெறிமுறைகள் 

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் களுக்கு 1.7.2021 முதல் 30.6.2025 வரையிலும், ஓய்வூதியர்களுக்கு 1.7.2022 முதல் 30.6.2026 வரையிலும் தொடர்ந்து 4 ஆண்டுகள் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வூதியர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை, ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான செலவு, சில குறிப்பிட்ட வகையான நோய், சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற இந்த திட்டம் வழிவகை செய்கிறது. 

  முன்அனுமதி

203 வகையான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அனைத்து கட்டண படுக்கை பிரிவுகளில் இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம் சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையுடன், சம்பந்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரியில் இதற்கென பணியில் இருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கான முன் அனுமதி பெற்ற பின்னர், சிகிச்சையை தொடங்க வேண்டும் எனினும், எதிர்பாராத சூழல் ஏற்பட்டால், மருத்துவ சிகிச்சையை உடனடியாக தொடங்கி, பின்னர் 48 மணி நேரத்துக்குள் முன்அனுமதி மற்றும் தேவையான இதர ஆவணங்களைப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இயற்கை மருத்துவ சேவை

இதற்கிடையே சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இதனை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது, ‘யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவை மூலம் முதியோர்களுக்கு யோகா, மசாஜ், நீராவிக்குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, நீர் சிகிச்சை, இயற்கை உணவு, இயற்கை மூலிகை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், நறுமண சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது' என்றார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சங்குமணி, தேசிய முதியோர் நல மருத்துவமனை இயக்குனர் தீபா, கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment