குழந்தைகளின் கண் பார்வை மேம்பட...டிப்ஸ்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 6, 2024

குழந்தைகளின் கண் பார்வை மேம்பட...டிப்ஸ்!

இன்றைய குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சமாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. ஸ்மார்போன் திரையில் கேம்ஸ் விளையாடுவது, வீடியோ பார்ப்பது என பொழுதை போக்குகின்றனர். 
இடை இடையே கல்வி தேவைக்காகவும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கிறார்கள். அதனால் குழந்தைகளிடத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அறவே தவிர்க்க முடியாத நிலையில் பெற்றோர் இருக்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தை செலவிடுவது உளவியல் ரீதியாக மட்டுமின்றி கண் பார்வை திறனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனை சரியாக பயன்படுத்தாவிட்டால் சிறு வயதிலேயே பார்வை திறன் குறைந்து கண்ணாடி போடும் சூழலுக்கு குழந்தைகள் தள்ளப்படுவார்கள். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் கண்ணாடி அணியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 
இதனை தவிர்க்க சிறுவயது முதலே குழந்தைகளின் கண்பார்வைத் திறனை பெற்றோர் கண்காணித்து வருவது அவசியமானது. பள்ளிக்கூடத்தில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடும் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்று சொன்னாலோ, தூரத்தில் இருக்கும் பொருள் கண்ணுக்கு புலப்படவில்லை என்று கூறினாலோ உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்தில் சிறிய அளவில் ஏற்படும் பார்வை குறைபாட்டு பிரச்சினைக்கு மருத்துவரை அணுகாமல், கண்ணாடி அணிய விருப்பமில்லாமல் பார்வை திறன் குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளும் குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தை பிறந்ததுமே அவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் கவனம் செலுத்துவது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது. இல்லாவிட்டால் ஸ்மார்ட்போன் பயன்பாடு பார்வைத் திறனை பாதித்துவிடும். 
குழந்தையின் அறைக்குள் பிரகாசமான விளக்குகள் பயன் படுத்தக்கூடாது. அதுபோல் குழந்தையின் முகத்திற்கு நேராக, கண்கள் கூசும் அளவுக்கு விளக்குகளை எரியவிடவும் கூடாது. செல்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. அதுபோல் அவைகளை கண்களுக்கு அருகில் கொண்டு செல்வதற்கோ, அவற்றை கூர்ந்து பார்ப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகளும் இடம்பெற வேண்டும். பச்சை நிற காய்கறிகளை தவறாமல் சமையலில் இடம்பெறச் செய்ய வேண்டும். 
அதில் இருக்கும் ஜியாசாந்தின், லூடின், துத்தநாகம் போன்றவை கண்புரை அபாயத்தை குறைக்க உதவும். முட்டையின் மஞ்சள் கருவிலும் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன. சிட்ரஸ் பழங்களில் இருக்கும் வைட்டமின் சியும் கண்புரையில் இருந்து பாதுகாக்கும். பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. அதுவும் கண்களுக்கு பலம் சேர்க்கும். அதனால் தினமும் நான்கு, ஐந்து பாதாமை தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது.

No comments:

Post a Comment